கோவை ராணுவ வீரரிடம் ரூ.4½ லட்சம் நூதன மோசடி..!

கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அசவர் கூறியிருப்பதாவது:-

நான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் காய்கறி கடை அமைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். அப்போது சாகர் சிபேட், அமுபா அமித் குமார், கணேஷ் என்பவர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் மகாராஷ்ட்ரா ஹமத் நகர் பகுதியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 50 டன் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்தேன்.

அதற்காக சாகர் சிபேட் ரூ. 4,50,000-யை அமுபா அமித் குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறினார். நானும் அந்த பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதன் பின்னர் அவர்கள் இதுவரை வெங்காயத்தை அனுப்பி வைக்கவில்லை. அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறி வருகின்றனர். அப்போதுதான் அவர்கள் என்னை ஏமாற்றி வருவது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவல் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பீளமேடு போலீசார் ராணுவ வீரரிடம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.