கோவையில் பெயிண்டர் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிப்பு- இளைஞர்கள் 3 பேர் கைது..!

கோவை சின்னியம்பாளையம் இந்திர நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). பெயிண்டர்.
சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலை வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென பெருமாளை தடுத்து நிறுத்தினர். அவர்கள் பெருமாளிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெருமாளின் கழுத்தில் வைத்தனர். பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பெருமாள் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெருமாளிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டது மதுரை சேர்ந்த மாதவன், சின்னியம்பாளையத்தை சேர்ந்த பரணிதரன் (18), சஞ்சய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை கடைவீதி அய்யாசாமி கோவில் வீதயை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று கெம்பட்டி காலனி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.300-யை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து கார்த்திகேயன் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கத்தி முனையில் பணம், செல்போன் பறித்தது கெம்பட்டி காலனியை சேர்ந்த பெயிண்டர் அங்குராஜ் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.