கோவை- பழனிக்கு பாதயாத்திரை- இன்று மாலை தொடங்குகிறார் வானதி சீனிவாசன்..!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா தேசிய மகளிர் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தலைமையில் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதயாத்திரை இன்று மாலை 4 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறது. பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் பாரதிய ஜனதா மகளிர் அணியினர், நிர்வாகிகள் பங்கேற்று செல்கிறார்கள். கோவையில் இருந்து புறப்படும் பாதயாத்திரை பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாகச் சென்று 2-ந் தேதி இரவு பழனியை அடைகிறது.
3-ந்தேதி காலை பழனி முருகனை, வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் தரிசனம் செய்து விட்டு திரும்புகிறார்கள். பாதயாத்திரை குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும், கோவை தெற்கு தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்காக வேண்டுதலை நிறைவேற்றவும் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறேன். என்னுடன் மகளிர் அணி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். தொடக்க நிகழ்ச்சியில் 50 பேர் வரை பங்கேற்க உள்ளோம். தொடர்ந்து செல்லும் வழியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் எங்களுடன் இணைந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.