450 போதை மாத்திரைகளுடன் கோவை பட்டதாரி வாலிபர் கைது.!!

கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோவை ஆர் .எஸ் . புரம் ,சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள மாநகராட்சி பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் பொதுக் கழிப்பிடம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த  போலீசார் அவரை சோதனை செய்தனர். அவரிடம் போதை மாத்திரை இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை காந்தி பார்க், சலீவன் வீதியை சேர்ந்த சீனிவாசன் மகன் அருள் செல்வன் ( வயது 26 ) என்பது தெரிய வந்தது. இவர் பட்டதரி ஆவார். கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது..போதை மாத்திரைகளை அவர் எங்கிருந்து வாங்கினார் ?இதில் யாருக்கு தொடர்பு உள்ளது ?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.