திருச்சி உதவி போலீஸ் கமிஷனருக்கு பிடிவாரண்டு – கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: கடந்த 2008 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார் . இது தொடர்பாக வழக்கு கோவையில் உள்ள 4 -வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு கடந்த 6 மாதமாக நீதிமன்றம் சார்பில் பலமுறை சம்மன் அனுப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே கடந்த 11ஆம் தேதி திருச்சியில் தற்போது உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் ராஜு வக்கு போலீசார் மூலம் நேரில் சென்று அழைப்பாணை கொடுத்தனர். இருந்த போதிலும் அவர் நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி அளிக்கவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் சரவண பாபு உத்தரவிட்டார்.