கோவை அப்பார்ட்மெண்ட் வீட்டில் ரூ. 20 லட்சம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை.!!

கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுருதி கலையரசன்(வயது 51) இவரது கணவர் இறந்து விட்டார். இவர் சித்ரா ஏர்போர்ட் அருகே தனியாக பெண்கள் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.இதனால் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஹாஸ்டலில் தங்கி விட்டார். வீட்டுச் சாவியை அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்திருந்தார். அப்போது அப்பார்ட்மெண்ட் காவலாளி சுருதி கலையரசனுக்கு போன் செய்து அவரது மகன் நண்பர்களுடன் வந்து வீட்டு சாவியை வாங்கிச் சென்றுள்ளதாக கூறினார். இதையடுத்து சுருதி நேற்று வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.20 லட்சத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.