நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி… மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து 4.80 லட்சம் டன் இறக்குமதி-மின் வாரிய அதிகாரிகள் தகவல்.!!

சென்னை: நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து 4.80 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட உள்ளது. வரும் 15-ம் தேதி முதல் தமிழகத்துக்கு இந்த நிலக்கரி வரும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2.29 கோடி வீட்டு மின் இணைப்புகள், 34 லட்சம் வர்த்தக இணைப்புகள், தொழிற்சாலைகளுக்கு 7.50 லட்சம் குறைந்த அழுத்த மின் இணைப்புகள், 10 ஆயிரம் உயர் அழுத்த மின் இணைப்புகள் உள்ளன.

குளிர்காலத்தில் தினசரி மின் தேவை 9 ஆயிரம் மெகாவாட், கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ள நிலையில், தற்போது தினசரி மின் தேவை மிக அதிக அளவாக 17 ஆயிரம் மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் 29-ம் தேதி தினசரி மின் தேவை 17,370 மெகாவாட்டாக உயர்ந்தது.

மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின் வாரியம், தனது சொந்த உற்பத்தி நிலையங்களில் இருந்து தினமும் 3,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. எஞ்சிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்தும், தனியார் மின் நிலையங்களிலும் இருந்து கொள்முதல் செய்கிறது.

அனல் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரிதேவைப்படுகிறது. ஆனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய2 சுரங்கங்களில் இருந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி விநியோகம் செய்யப்படுகிறது.

சுரங்கங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் பாரதீப் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, அங்கிருந்துகப்பல்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. எனினும், பாரதீப் துறைமுகத்தில் தமிழகத்துக்கு நிலக்கரி ஏற்ற ஒரு தளம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, சரக்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் நிலக்கரி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு, முழு அளவில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 மாதங்களுக்குத் தேவையான 5 லட்சம் டன் நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது, இந்தோனேசியா மட்டுமின்றி, மலேசியாவில் இருந்தும் 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. இந்த நிலக்கரி வரும் 15-ம் தேதி முதல் தமிழகத்துக்குவரும். இதேபோல, நடுத்தரகால அடிப்படையில் 650 மெகாவாட் மின்சாரமும்,குறுகியகால அடிப்படையில் 750 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது காற்றாலைகளில் இருந்து தினமும் 2,000 மெகாவாட்டும், பகலில் சூரியசக்தி மூலம் 3,200 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கிறது. இவற்றைக் கொண்டு இந்த மாத தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

ஜுன் மாதம் தொடங்கியதும் தென் தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். அப்போது தினசரி மின் தேவை படிப்படியாக குறையும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது காற்றாலைகளில் இருந்து தினமும் 2,000 மெகாவாட்டும், பகலில் சூரியசக்தி மூலம் 3,200 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கிறது.