இனி ஒட்டு மொத்த தமிழ்நாடும் சோலார் மையமாக போகுது..!!

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் சோலார் பூங்கா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றாக, மின் உற்பத்தி செய்வதில் ஒட்டுமொத்த நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் அமைக்கப்பட்ட இந்தியாவிலேயே முதல் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார். ஸ்பிக் தொழிற்சாலையில் 75 ஏக்கர் பரப்பளவில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் இதுவரை இல்லா அளவில் 4ஆயிரத்து 141 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு புதிய மைல்கல்லைப் படைத்தது.

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 690 மெகா வாட் மின் உற்பத்திக்கான சோலார் பேனல்கள் உள்ள நிலையில், அதிலிருந்து அதிகபட்சமாக 4 ஆயிரம் மெகா வாட் வரையில் மின் உற்பத்தி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் நிலக்கரி பற்றாக்குறை, சர்வதேச சந்தையில் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களில் நடைமுறையில் உள்ள மின்சாரத்திற்கு மாற்று வழி உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சோலார் பேனல்கள் அமைப்பது குறித்தும், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் செயல்படுத்துவது குறித்தும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதற்கட்டமாக திருவாரூர் சோலார் மின் உற்பத்தி பூங்கா விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சோலார் மையமாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” தெரிவித்தார்.

தொடர்ந்து, கூடலூர் வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் வனப்பகுதியைச் சார்ந்து வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.