அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி போலும் – கலாய்த்த டி.டி.வி.தினகரன்..!

மிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுவதாகவும், திராவிட மாடல் ஆட்சிக்கு அதுவும் ஒரு உதாரணம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 60 வயது தொடங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபட்டபின் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ஆதீனத்தில் ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், “அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த கட்சி பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன். தேர்தல் சமயத்தில் பேசிக் கொள்ளலாம். சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது பற்றி எனக்குத் தெரியாது.

டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். வருகின்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும். மத்தியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லுகின்ற கூட்டணி அமைக்கப்படும்.

திமுக ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சந்தித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையை சந்திப்பார்கள். மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது திமுக விடியல் ஆட்சியின் அவலம். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது.

அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால்தான் திமுகவிற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் தீர வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது 3000 வழங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் அந்த நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்” என்று தினகரன் கூறினார். திமுக அமைச்சர்களிடையே மோதல் குறித்த கேள்விக்கு, ”தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்களிடையே மோதல் ஏற்படுகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இதுவும் ஒரு உதாரணம்” என்றார்.