காதல் தகராறில் கோஷ்டி மோதல் – 7 பேர் கைது.!!

கோவை: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 27) இவர் கோவை துடியலூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் . இவருடன் சின்னவேடம்பட்டியை சேர்ந்த வேணுகோபால் ( வயது 44) என்பவரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் ( வயது 25 ) என்பவர் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்ததாக அருணாச்சலத்திடம் கூறியுள்ளார். இதனால் அருணாச்சலம் , ஜெபஸ்டினை அழைத்து கண்டித்தார். ஆனாலும் சம்பவத்தன்று ஜெபஸ்டின் வேணுகோபால் மகளிடம் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அருணாச்சலம் அவரை தாக்கினார். அப்போது அங்கு வந்த ஜெபஸ்டின் சகோதரர் அகஸ்டின் அவரது நண்பர் உடையாம்பாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ( வயது 27) ஆகியோர் அருணாச்சலத்தை தாக்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அருணாச்சலம் வேணுகோபால் மற்றும் அவரது நண்பர்கள் ஓமலூரை சேர்ந்த கோபிநாத் ( வயது 27) கோவிந்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பவுல்ராஜ் ( வயது 24 ) ஆகியோர் வசந்தகுமார் வீட்டிற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது . இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சேர்ந்த ஜெபஸ்டின், அகஸ்டின், வசந்தகுமார், அருணாச்சலம், கோபிநாத், பவுல்ராஜ், வேணுகோபால் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.