நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகை ரூ.20,860 கோடியை விடுவிக்க கோரிக்கை.!!

புதுடெல்லி: 4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள்:

2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை மத்திய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதைப்போன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழகத்திற்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் மத்திய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.எனவே, அடிப்படை மானிய நிலுவைத்தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது. பெருந்தொற்றிற்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், 30.06.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23 நிதியாண்டில், தமிழகம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022 க்குப் பின் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

கெஜ்ரிவாலுடன் சந்திப்பு: இந்த சந்திப்பிற்கு பின்னர் மேற்கு டெல்லி வினோத்நகரில் உள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்டார். பள்ளியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள அறையில் மாதிரி பள்ளி தொடர்பான வீடியோ திரையிடப்பப்பட்டது. மேலும் பள்ளியின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.