சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு – பயணிகள் அதிர்ச்சி.!!

சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை மற்றும் கோவை – பெங்களூர் என என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயிலான சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சேவையை தொடங்கியது. சராசரியாக இந்த வந்தே பாரத் ரயில் 7 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து நெல்லை இடையேயன 650 கி.மீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. இந்தநிலையில், இன்று வழக்கம் போல் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மணியாச்சி அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், ரயிலின் 9 பெட்டிகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.