இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து.!!

ர்நாடகா அரசு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத சிறுபான்மையினருக்கான இஸ்லாமியர் தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக அந்த சமூகத்தினர் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு(இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள்.

அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. 2ஏ அந்தஸ்தில் உள்ள 15 சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கர்நாடாக அரசு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் இடஒதுக்கீடு, லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக தலா 2 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்றது நடப்பு பாஜக அரசின் கடைசி அமைச்சரவை கூட்டமாகும். அம்மாநிலத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.