கோவையில் போலி நிறுவனங்கள் நடத்தி வெளிநாட்டு ரெடிட் கார்டு மூலம் ரூ. 43.3/4 லட்சம் மோசடி- 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவர் கைது..!

போலியாக நிறுவனங்களை தொடங்கி வெளிநாட்டு கிரெடிட் கார்டு மூலம் ரூபாய் 43.3/4 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த இரண்டு பேரை 5 ஆண்டுகளுக்குப் பின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன், டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலியாக நிறுவனங்களை தொடங்கினார். இந்த நிறுவனங்களுக்கு வங்கி கணக்கு தொடங்கியதுடன் கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை ஸ்வைப் செய்தும், இயந்திரங்களையும் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் பெயரில் வாங்கினார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வெளிநாட்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டனர். குறிப்பாக சீனா மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெடிட் கார்டுகளை பெற்று அதனை மேற்கண்ட ஸ்வைப் இயந்திரங்களை பயன்படுத்தி ரூபாய் 43 லட்சத்தி 76 ஆயிரம் பணத்தை தங்களது நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் மாற்றி மோசடி செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். இது குறித்து கடந்த 2017 ஆண்டு சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு வங்கி அதிகாரிகள் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தேவராஜ், மனோகரன் ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பு உள்ளதா ? என விசாரணை நடத்தி வருகின்றன.