குழிக்குள் சிக்கிய பேருந்து: கோவையில் போக்குவரத்து பாதிப்பு

குழிக்குள் சிக்கிய பேருந்து: கோவையில் போக்குவரத்து பாதிப்பு

கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கே.என்.ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பிரதான மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலை தோண்டப்பட்டு பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த குழிகள் குறித்த எந்த அறிவிப்பும் முறையாக வைக்கப்படவில்லை.  இதை அறியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக குழியில் சிக்கியது.  இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பேருந்தை கிரேன் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தடாகம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் கடும் தூசி பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாலை கடுமையாக சேதமடைந்து காணப்படும் நிலையில் தற்போது குடிநீர் குழாய் பணிகளும் தொடர்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பேருந்து குழிக்குள் சிக்கியதை அடுத்து, தடாகம் சாலையில் வாகன போக்குவரத்தை அப்பகுதி மக்களே மாற்றி அமைத்து வருகின்றனர்.