15 ஓட்டுகளை பெற்று பாஜக கவுன்சிலர் வெற்றி… அதிர்ச்சியில் திட்டக்குழு தேர்தலில் திமுக, அதிமுக..!

கோவை;கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பா.ஜ., கவுன்சிலர் 15 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு 18 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
இதில் ஊரக உள்ளாட்சிகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் 17 பேரும் சேர்ந்து, 5 உறுப்பினர்களை தங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க.,வுக்கு 7 உறுப்பினர்கள், தி.மு.க.,வுக்கு 7 உறுப்பினர்கள், பா.ஜ., 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 உறுப்பினர் உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், அனைத்து இடங்களையும் அவர்களே கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர்களே, நேரடியாக களம் இறங்கி ஓட்டு சேகரிப்பிலும், கவுன்சிலர்களை சந்திப்பதிலும் ஈடுபட்டனர்.இதனால் முடிவுகள் மாறும் நிலை இருப்பதாக, கவுன்சிலர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., மட்டுமின்றி, அ.தி.மு.க.,வுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முடிவு வெளியானது.பா.ஜ., சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் கோபால்சாமி, 15 ஓட்டுகளை பெற்று முதலாவதாக வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கந்தசாமி, சக்திவேல், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜன் ஆகிய மூவரும் தலா 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.இவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஐந்தாவது இடத்தில் தலா 8 ஓட்டுகளுடன் நான்கு பேர் களத்தில் இருந்தனர். அவர்களில் இருந்து யாரேனும் ஒருவரை, குலுக்கல் மூலம் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி அ.தி.மு.க.,வை சேர்ந்த பிரதீப், காளீஸ்வரி, கொ.ம.தே.க.,வை சேர்ந்த ராதாவேணி, தி.மு.க.,வை சேர்ந்த சரவணகுமார் ஆகியோர் பெயர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுகள் குலுக்கி போடப்பட்டன. இதில், அ.தி.மு.க., உறுப்பினர் பிரதீப் தேர்வு செய்யப்பட்டார்.மொத்தத்தில், அ.தி.மு.க.,வில் 3 பேரும், பா.ஜ.,- தி.மு.க.,வில் இருந்து தலா ஒருவரும் வெற்றி பெற்றனர்.பா.ஜ., உறுப்பினர் கோபால்சாமி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என இரு தரப்பினர் ஓட்டுக்களையும் பெற்று வெற்றி பெற்றது, அந்த கட்சிகளின் நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.மறைமுக கூட்டணியால் ஓட்டுகள் அணி மாறி போடப்பட்டதும், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டிய இடத்தில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதும், தேர்தல் முடிவில் வெட்டவெளிச்சம் ஆனது.இந்த தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், 7 ஓட்டுகளுடன் தோல்வி அடைந்தார்.