தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது பிஎப்ஐ அமைப்பு… சர்வதேச பயங்கரவாதிகளோடு தொடர்பு உள்ளது உறுதி- ஆர்.என்.ரவி பேச்சு..!

குடியரசு தின விழாவிலையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைக்காட்சி மூலம் ஊரையாற்றினார்.

அவரது உரையில், விடுதலை வேள்வியின்போது,அனைத்துக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு, தியாக சீலர்களுக்கு ஆதரவாக நின்ற இவர்களின் குடும்பத்தாரையும் உற்றார் உறவினரையும் நன்றியோடு நினைவு கூர்கிறோம். இந்த நாளில், நம்முடைய ராணுவத்திற்குத் தலைவணங்குகிறோம். புதிய இந்தியாவின் உதயத்தையும் எழுச்சியையும் விரும்பாத புற அழுத்தங்களும் உள்ளார்வக் குழுக்களும் உள்ளன. பிரிவினை மற்றும் கற்பனைச் சிக்கல்களை உருவாக்கியும் உயர்த்திப் பிடித்தும் இவை நம்முடைய வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க முயல்கின்றன. நம்முடைய சமூக இனம், மதம் மற்றும் வட்டார நல்லிணக்கங்களைச் சிதைப்பதற்கு இவை கங்கணம் கட்டிக்கொண்டாற்போல் உள்ளது.

இவற்றில் சில அமைப்புகள், பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கம், இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். சமூக நல்லிணக்கத்தைச் சேதப்படுத்துவதற்கும் அரசியலமைப்பு நிரலைச் சிதைப்பதற்கும் ஈடுபடுத்திக்கொண்டுள்ள இந்த அபாயகர அமைப்புக்கு வெளியிலிருந்து நிதி கிடைக்கிறது; சர்வதேச பயங்கரவாத அமைப்புகளோடு இதற்குத் தொடர்புகளும் உள்ளன. துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் இருப்பு சற்றே வலிமையானதாகும். இந்த அமைப்பிற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தவுடன், பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் துணிச்சல் இதற்கு இருந்தது என்பதை நாம் அறிவோம்.

கோயம்புத்தூரில் நிகழவிருந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டுவிட்டாலும் கூட சர்வதேச பயங்கரவாதிகளோடு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.சட்ட அமலாக்க முகமைகள் இப்படிப்பட்ட அமைப்பினை மிகக் கவனமாகக் கண்காணித்து ஓடுக்கவேண்டும் என்பது ஒருபுறமிருக்க. இத்தகையவற்றில் நம்முடைய குடிமக்களும் கவனமாகவும் விழிப்போடும் இருக்கவேண்டும்; பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்து தகவல்களை செய்திகளை தெரிந்தால் அல்லது ஐயம் ஏற்பட்டால் சட்ட முகமைகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.