லோக்சபா, சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – பழனிசாமி கட்டளை..!

லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்கள் நியமனங்களை விரைவாக முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் தாவியவர்களால், பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்’ என, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த, பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:மதுரை மாநாட்டின் வெற்றி, கட்சியில் புதிய எழுச்சியை உருவாக்கி உள்ளது. தேசிய அளவில் அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உணவு விஷயம் மட்டும் குறையாக பேசப்பட்டதே தவிர, மாநாடு பற்றி வேறு எந்த ஒரு குறையும் இல்லை. மாநாட்டு ஏற்பாடு குழுவினருக்கும், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அப்படி வரும்பட்சத்தில் இரண்டு தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.பார்லிமென்ட் தேர்தலில், எம்.பி.,க்களை அதிகமாக பெற, நாம் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பார்லிமென்டில், அ.தி.மு.க., பெரிய கட்சி என்ற இடத்தை பெறும் வகையில், நம் வலிமையை நிலைநாட்ட வேண்டும்.மாற்றுக்கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தால், மீண்டும் சேர்த்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.கட்சியின் கட்டமைப்பில், மிக முக்கியமான அஸ்திவாரமாக உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனங்களை விரைந்து முடிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் நியமன பட்டியலை அக்., முதல் வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.கட்சியிலில் இருந்து வெளியேறியவர்களால் மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப வேண்டும். தகுதி படைத்த நிர்வாகிகள் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க., ஆட்சியின் வேதனைகளை விளக்கியும் தேர்தல் பிரசாரத்தை துவக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி வரவேற்றார்.

கூட்டம் துவங்கும் முன், பழனிசாமியை மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தனித்தனி குழுக்களாக சந்தித்து பேசினர்.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில், 117 மாவட்ட செயலர்கள் வரும் வகையில் கட்சி அமைப்பை மாற்ற வேண்டும்.எந்ததெந்த மாவட்டங்களை பிரிப்பது என்பது குறித்து, தற்போதைய மாவட்ட செயலர்களே முடிவு செய்ய வேண்டும். யாரை மாவட்ட செயலராக நியமிக்கலாம் என்பது குறித்த பெயரையும், அவர்களே பரிந்துரைக்க வேண்டும் என, பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.’பொதுச்செயலருக்கு முழு அதிகாரம் உள்ளது. தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்’ என, பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.***சனாதன விவகாரம்திசை திருப்பும் செயல் ”ஷாக் அடிக்கும் வகையில், மின்கட்டணம் உயர்வு, கள்ளக்கடத்தல், போதை பொருள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, சீரழிந்த முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் படும் வேதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும்படி பழனிசாமி கூறினார்.