சோனியா காந்தியை பாரத மாதா போல் சித்தரித்து பேனர்… காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்.!!

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துக்குகுடாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சோனியா காந்தியை பாரத மாதா போலச் சித்தரித்து கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பிற தலைவர்களின் கட்அவுட்களுடன் சோனியா காந்தியை பாரத மாதா தோற்றத்தில் சித்தரிக்கும் கட்அவுட்டும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்அவுட்டின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி பாரத மாதா தோற்றத்தில் இருக்கும் கட்அவுட்டில் தலையில் கிரீடம், கையில் காங்கிரஸ் கொடி ஏந்தி இருப்பதைக் காண முடிகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த கட்அவுட்க்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“இந்தியாவை அவமதிப்பது காங்கிரசுக்கு வழக்கமாக உள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பி.டி.கல்லா சோனியா மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பினார். இப்போது சோனியா காந்தியை பாரத மாதாவாகப் பார்க்கிறார்கள். சோனியா காந்தியின் கட்அவுட், அவர்களுக்கு நாட்டை விட காங்கிரஸ் குடும்பம் தான் பெரியது என்றும் கருதுகின்றனர்” என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.