கோவை பா.ஜ.க நிர்வாகி கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது..!

கோவையில் கடந்த வாரம் பா.ஜ.க. அலுவலகம், மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இது தொடர்பாக கோவை மாநகர போலீசில் மட்டும் இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க .நிர்வாகி மோகனின் கடைமீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது .இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாஜக நிர்வாகி மோகனின் கடைமீது பெட்ரோல் குண்டு வீசியதாக வெள்ள கிணறு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது ரபிக் (வயது 31) என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் இவர் எஸ் .பி. பி .ஐ .கட்சி நிர்வாகி என்பது தெரியவந்தது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- பெட்ரோல் குண்டுவீச்சு, அரசு பஸ் கண்ணாடி உடைத்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினார்கள்.