வரும் 2ம் தேதி முதல் கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்..!

கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, டிரைவர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000 தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக முறையான ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு 15 ஆயிரம் ரூபாய் போனஸாக வழங்க கோரிக்கை விடப்பட்டது. தொழிலாளர்களின் 19 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், செல்வராஜ், மணியரசு, செல்வம் உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . இந்த பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கோவை மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பாக பதில் தரவில்லை.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3000 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்பட்டது. இந்தத் தொகை கூட இந்த ஆண்டில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
துப்புரவு தொழிலாளர் சங்கங்களை சார்ந்தவர்கள் கூறுகையில்,”
தற்காலிக துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தர முன் வரவில்லை. ஊதியம் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தி யும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வரும் 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
கோவை மாநகராட்சியில் தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. போராட்டம் காரணமாக குப்பை அகற்றும் பணி நடத்தப்பட மாட்டாது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.‌ எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம் என்றனர்.