பக்தர்கள் கவனத்திற்கு… சபரிமலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு ..!

பரிமலையில் 27-ந் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. உடனடி முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலம் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி கொண்டு வரப்படுகிறது. 27-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று இரவு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பிறகு மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.இதனையொட்டி மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அருள்வார்.

இதற்கிடையே மண்டல பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்க அங்கி மலைக்கு எடுத்து வருவதையொட்டி 26-ந் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசன முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல பூஜை நடைபெறும் 27-ந் தேதி சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.