அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் – ஈரான் ஆயத்தம்.!!

காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில் 33,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் தொடக்கத்தில் கூறி வந்தது. இருந்தபோதிலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு, இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், “இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான திட்டம் உச்சபட்ச தலைவர் முன் முன்மொழியப்பட்டது. தாக்குதலால் ஏற்படும் அரசியல் அபாயம் குறித்து அவர் ஆலோசித்து வருகிறார்” என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அமைதி காக்கும்படி ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. மேற்காசியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படட்டுள்ளது. அமெரிக்காவும் பிரான்சும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இதேபோன் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது.