ஈபிஎஸ் ஆளா என கேட்டு மாஜி பெரம்பூர் செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல்… அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு..!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன்படி, பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார். இந்த ஆலோசனையில் ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக அலுவலகத்தில் தீர்மானக்குழு ஒருபுறமும், ஓபிஎஸ் மற்றொரு புறமும் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது தீர்மானக்குழுவுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் குவிந்துள்ளனர். அவ்வப்போது அங்கு மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் வந்த முன்னாள் பெரம்பூர் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாய் பகுதியில் தாக்கியதால் சட்டை முழுவதும் ரத்த கறையுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். தொண்டர்கள் தாக்கியதில் ஜெயக்குமாரின் ஆதரவாளர் மாரிமுத்து ரத்த காயத்துடன் செய்தியாளர்களிடம் புகார் அளித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி ஆளா?

என கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வெளி ஆட்கள் தான் தாக்கினார்கள் எனவும் கூறியுள்ளார். ஒருபக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தீர்மானக்குழுவுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் ஒற்றை தலைமை சர்ச்சையால் அடிதடி, மோதலால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மாறி மாறி முழக்கமிட்டு வருகின்றனர்.