இரவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு.!!

கோவை ஆபராம்பாளையம் 28- வது வார்டு ஷோபா நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் . பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொது மக்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அப்பகுதிக்கு இரவில் குடி தண்ணீர் வினியோகம் செய்தனர்..