விசாரணைக்கு அழைத்து இளைஞர்களின் பல்லை பிடுங்கிய ஏஎஸ்பி… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி.!

திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர், பல்பீர் சிங். இவர் சார்பு ஆய்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அந்த இளைஞர்களின் பற்களை, கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கி, கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற நபர், அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்னை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த பல்பீர் சிங், உடனடியாக இளைஞர் சூர்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து அவரது பற்களை துடிதுடிக்கப் பிடுங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தற்போது சிறிய பிரச்னை செய்ததாகக் கூறி அவர்களது பற்களையும் உடைத்து தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில இளைஞர்களின் பற்களை உடைத்து அவரது வாயில் ஜல்லிக்கற்களை போட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும்போது, ”ஒரு சின்ன வழக்கிற்காக அம்பாசமுத்திரம் காவல் துறையினர் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஏஎஸ்பி தனது கையில் கையுறை அணிந்துகொண்டும், டிராக் பேண்ட் அணிந்தும் அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லிக்கற்களை போட்டு கொடூரமாக அடித்தார்.

மேலும், கற்களை வைத்து பல்லை உடைத்தார். எனது அண்ணனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவரது ஆண் உறுப்பை நசுக்கி கொடுமைப்படுத்தினார். எனது அண்ணன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார். எங்களுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது” என தெரிவித்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும், விசாரணை அதிகாரியாக சேரன்மகாதேவி சார்ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங்கை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை அதிகாரி விரைவில் விசாரணை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.