வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாடகி பாலியல் புகார்..!

மிழ் சினிமாவில் பல அற்புதமான மண்வாசனை மிக்க பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடல்களுக்காக 5 முறை தேசிய விருதை பெற்றவர்.

பல காதல் பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்களும் உண்டு. பல கவிதை புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி வைரமுத்து கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தபோது தன்னை வைரமுத்து தவறாக அணுகியதாக கூறியிருந்தார். ஆனால், வைரமுத்து அதை மறுத்தார். இது தொடர்பாக சின்மயி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். ஆனால், வைரமுத்து மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீ டூ என்கிற ஹேஷ்டேக்கில் பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிட்டனர்.

இப்போது, வைரமுத்து மீது மற்றொரு பாடகியும் பாலியல் புகாரை கூறியுள்ளார். புவனா சேஷன் என்கிற பாடகி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘சின்மயி கூறியது உண்மைதான். எனக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இப்போது இதை ஏன் கூறுகிறேன் எனில் என் மகன் கொடுத்த நம்பிக்கைதான். வைரமுத்து மட்டுமல்ல.

அவரை போல பலர் இருக்கிறார்கள். பல பெண்கள் வெளியே சொல்வதில்லை. வைரமுத்து மீது மட்டும் நான் புகார் சொல்ல காரணம் அவரின் இச்சைக்கு இணங்காவிட்டால் வாய்ப்புகளை கெடுத்துவிடுவார். அதனால்தான் அவரை பற்றி பேசுகிறேன். எனக்கு வரவேண்டிய வாய்ப்புகளை கெடுத்தார். பல பெண்களும் வெளிப்படையாக பேச வேண்டும்’ என அவர் கொடுத்துள்ள பேட்டி சமூகவலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அதேநேரம், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் உள்நோக்கத்துடன் வைரமுத்து மீது தவறான புகார்களை கூறுவதாக திமுக ஆதரவாளர்களும், ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.