தேர்தல் விதிகளை மீறிய அண்ணாமலை : ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை – திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு..!

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் கோவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் தி.மு.க கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்: –

அப்போது பேசிய நா. கார்த்திக், நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10:40 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி பா.ஜ.க அண்ணாமலை பிரச்சாரம் செய்து உள்ளார் எனவும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார் எனவும் ஆதார வீடியோ காட்சிகளை காண்பித்தார். இது குறித்து இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து உள்ளனர் எனத் தெரிவித்த அவர் வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகள் எங்கள் கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றார். மேலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

இரவு 10.40 மணிக்கு பிரச்சார வாகனத்தில் ஒலி பெருக்கியில் அண்ணாமலை பேசிக் கொண்டு செல்கிறார் என குறிபிட்ட நா.கார்த்திக் அவர் (அண்ணாமலை) எப்படிப்பட்டவர் என்பதற்கு இது சாட்சி என்றார். மேலும் இதே போல பல இடங்களில் அத்துமீறி தேர்தல் பிரச்சாரம் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.