காவி சட்டையில் அம்பேத்கர் போஸ்டர்… அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு- விசிகவினர் கைது..!

ட்டமாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டியிருந்தனர்.

மேலும் அந்த போஸ்டரில், ‘காவித் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் கண்டனம் வலுத்த நிலையில், சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, செருப்புகளை வீசியும் அர்ஜுன் சம்பத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் இருக்கும் சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் வன்னியரசு உட்பட 29 நபர்களை காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பின்னர் இரவு 8.30 மணிக்கு அனைவரையும் விடுவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 20 பேரின் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என்றும், விபூதி குங்குமம் பூச மாட்டேன் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்திருந்தார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.