பாஜகவுடன் கூட்டணி தொடரும் – ஓபிஎஸ் அணி அறிவிப்பு..!

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி.யை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த ஓபிஎஸ் பிரிவு மாநில செயலாளர் ஓம்.சக்தி சேகர் பாஜக தலைவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், புதுச்சேரி மாநிலத்தின் பாஜக தலைவராக ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி மாநில தலைவராக நியமனம் செய்து இருக்கின்றார்கள். இந்த நியமனத்தை வரவேற்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கம் என்கின்ற வகையிலே எதிர் வருகின்ற தேர்தலில் இணைந்து சிறப்பாக செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு உண்டான அனைத்து வழிகளிலும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உறுதுணையாக இருக்கும்.

கடந்த எட்டு ஆண்டு காலமாக இதற்கு முன்னால் இருந்த பாஜக தலைவர் சாமிநாதன் புதுச்சேரி மாநிலத்தின் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு புதுச்சேரியில் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து கொடுத்தவர். அதேபோன்று இப்பொழுது வந்திருக்கின்ற செல்வகணபதி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து புதுச்சேரி வாழ் மக்களுக்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக இருந்து இந்த ஆட்சியை செம்மையாக செயல்படுவதற்கு வழிவகை செய்வோம் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் தன்னைத்தானே ஒரு பதவியை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் இப்பொழுது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளியில் சென்று விட்டார்கள். எங்களை பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஓபிஎஸ் தான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி புதுச்சேரியிலும் தமிழகத்திலும் அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து செயல்படும் என்றார்.