5 அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும் கடல் அலைகள்… படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் மீனவர்கள்..!

சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டாஸ் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வழக்கத்தை விட காற்றின் வேகம் சற்று அதிகரித்து இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடல் சீற்றம் என்பது ஐந்து அடி முதல் 10 அடி வரை கடல் அலைகள் ஆக்ரோஷமாக தடுப்பு கற்களைத் தாண்டி வெளியே அடிக்கக்கூடிய காட்சிகளை காண முடிகிறது.

காசிமேடு மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடிய 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையிலே கட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஆந்திரா துறைமுகத்தில் மற்றும் அருகில் உள்ள துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்று ஆக்ரோஷமாக அலைகள் எழுவதை கடந்த வர்தா புயலின் போது பார்த்தோம், ஆனால் அதற்கு பின்பு தற்போது தான் கடல் அலை என்பது அதிக அளவில் அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தனர். கடல் அலைகள் அதிகமாக இருப்பதால் கடல் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகள், இன்ஜின்கள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். காற்றின் வேகம் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் கரையில் நிற்கப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் ஏற்படும் என்கிற அடிப்படையில் பாதுகாப்பான முறையில் விசைப்படகுகளை நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.