உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற ஆப்கான் பெண்கள்: தடை விதித்த தலிபான்கள்- ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மாணவிகள்.!!

ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு..

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கொரோனாவால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் புதிய கல்வியாண்டு துவங்கி உள்ளதால், சமீபத்தில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து 7 மாதங்களுக்கு பிறகு தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன. தலிபான் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து, 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவியர், தங்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் தடை விதிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பில், இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும். பெண்களுக்காக உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை திரும்ப பெறுவதாக தலிபான்கள் நேற்று அறிவித்தனர்.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை அவை மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளனர். காபூலில் உள்ள மூன்று உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நேற்று காலை மாணவிகள் உற்சாகத்துடன் வளாகங்களுக்குத் திரும்பியதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் திரும்ப வீட்டிற்குச் செல்ல உத்தரவிடப்பட்டனர்.

அவர்கள் கூறுகையில், பல மாணவர்கள் கண்ணீருடன் வீடுகளுக்குச் சென்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடப்பட்டது என தெரிவித்தனர். பின், ஆசிரியர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, மாணவியர் அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தலிபான் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கைகக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், தலிபான்கள் பெண் மாணவர்களுக்கு கல்வியைத் தடை செய்வது இது முதல் முறை அல்ல, கடைசியாக 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆண்ட போது, தலிபான்கள் பெண் கல்விக்கு தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், உயர்நிலைப் பள்ளி வயதுடைய பெண்களுக்கான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, பெண்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கான பள்ளிகளும் நேற்று நாடு முழுவதும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்தது. அனைத்து மாணவர்களும் வகுப்புக்குத் திரும்பியதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.