அதிக வட்டி கேட்டு மிரட்டும் பெண்- வாலிபர் போலீசில் புகார்..!

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது32). உணவு பார்சல் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சொர்ணவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார்.
அப்போது பூர்த்தி செய்யப்படாத காசோலையை சொர்ணவள்ளி பெற்றுக் கொண்டார். பின்னர் கோகுல் ரூ.70 ஆயிரம் வரை வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டினார். ஆனால், சொர்ணவள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி கோகுலிடம் இருந்து பெற்ற காசோலையை வங்கியில் செலுத்தியுள்ளார்.
பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனையடுத்து சொர்ணவள்ளி தன்னிடம் கடன் பெற்று கோகுல் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனிடையே அதிகவட்டி கேட்டு தன்னை மிரட்டுவதாக கோகுல் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.