ஆழியாறு சாலையோரம் நின்ற காட்டு யானை- வாகன ஓட்டிகள் அச்சம்..!

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆழியாறு கவியருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். சில நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக சாலைகளில் நிற்கும். இதனால் வனத் துறையினர் அவ்வப்போது ரோந்து சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அடிக்கடி சாலைக்கு வந்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் சாலையோரம் நின்ற அந்த யானை பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வந்த அரசுப் பேருந்தை தாக்குவதுபோல வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். யானையை அப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.