சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த 23 வயதான வாலிபர். கூலி தொழில் செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை 2020- ஆம் ஆண்டு கடத்தி திருமணம் செய்ததுடன் அந்த சிறுமையுடன் குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமிக்கு பிரசவ வலி வந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் அந்த சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது .இது குறித்து புகாரின் பேரில் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக கோவையில் உள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..