தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் புதிய உச்சம்..!

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருக்கும். இந்த காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கியது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி காற்றாலைகள் மூலம் 5535 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இது தான் இதுவரை காற்றாலைகள் மூலம் கிடைத்த உச்சபட்ச மின்சாரமாக இருந்தது.

இந்நிலையில் 2 முறையாக காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி நேற்றைய தினம் 5689 மெகா வாட் மின்சாரம் கிடைந்துள்ளது. இது கடந்த வாரம் கிடைத்த மினசாரத்தை விட 1702 மெகா வாட் அதிகம் ஆகும். வரும் நாட்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.