கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழு மூலம் போதை மாத்திரை விற்பனை-மூளையாக செயல்பட்ட பட்டதாரி பெண் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது..!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கஙகள் மாணவர்கள் உள்பட இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

இதைத்தடுப்பதற்கு போலீசார் மத்தியில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்க சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அவரது உத்தரவையடுத்து போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள டிரஸ்ட்புரம் பகுதியில் இந்த போதை மாத்திரை கும்பல் அதிகளவில் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால், அந்த பகுதியில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் நடமாடினர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை மடக்கிய போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் வலி நிவாரணி மாத்திரைகளான டைட்டல், நைட்ரவிட் போன்ற மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகளுக்கான முறையான ஆவணங்கள் ஏதுமே அவர்களிடம் இல்லை. இந்த மாத்திரைகளையே அவர்கள் போதை மாத்திரைகளாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் கைதானது அசோக் நகரைச் சேர்ந்த கிஷோர் ( வயது 23) மற்றும் கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (வயது 20) ஆகியோர் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதை பழக்கம் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு என்று தனியாக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த குழுவில் யார்? யாருக்கு? எப்போது போதை மாத்திரை வேண்டும் என்ற தகவலை பகிர்ந்து கொள்வதும், எங்கே சந்தித்து போதை மாத்திரைகளை பெறுவது என்பது குறித்தும் தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் அளித்த தகவலின்படி இந்த விவகாரத்தில் தொடர்புடைய சென்னை, கொத்தவால்சாவடியைச் சேர்ந்த பூங்குன்றன் (26), ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (23) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்ட அருகே கடமலைகுண்டைச் சேர்ந்த கோகுலன் (24), சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி ( வயது 22) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜலட்சுமி என்பவர் பட்டதாரி பெண் என்பதும், அவரே கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்திய போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த போதை மாத்திரை விற்பனைக்கு ராஜலட்சுமியே மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தமாக 4 ஆயிரத்து 620 நைட்ரவிட் மாத்திரைகளும், 2 ஆயிரத்து 220 மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்,நூற்றுக்கணக்கான கருக்கலைப்பு மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மாத்திரைகள் அனைத்தும் மருத்துவர்களின் முறையான பரிந்துரையின்படியும், அவர்களின் மருத்துவச்சீட்டு இருந்தால் மட்டுமே விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.