மின் கட்டண உயர்வு : இறுதி முடிவெடுக்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை..!!

துரை: மின்கட்டண உயர்வு தொடர்பான மனுவின் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டத்திற்கும் தடை விதிக்கும்படி கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ”தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மின்கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இதற்காக ஒன்றிய அரசு 3 முறை கால அவகாசம் கொடுத்துள்ளது. அதேநேரம் வெளி மாநிலத்தில் மின்சாரம் கொள்முதல் செய்யவும் தடை விதித்துள்ளது. இதனால், மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும், நெருக்கடியும் மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.13,470 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு ரூ.50 கோடியும், மாதத்திற்கு ரூ.1,500 கோடியும் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்த்திடும் வகையில் தான் மின் கட்டணத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2021லேயே ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் தொடர்பான முடிவெடுக்க சட்டத்துறை உறுப்பினர் நியமித்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த விவகாரம் பொதுநல மனுவைப் போன்றது. இதை ரிட் மனுவாக தனி நீதிபதி முன் தாக்கல் செய்ய முடியாது. இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் தான் முடிவெடுத்திருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல. எனவே, அவரது உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து நீதிபதிகள், சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.