ரூ.3,383 கோடி சொத்து.. பிச்சைக்காரராக பாஜக எம்எல்ஏ!

மகாராஷ்டிராவில் ரூ.3,383 கோடி சொத்து வைத்துள்ள பாஜக எம்எல்ஏ தனது ஆன்மிக குரு சொன்னதை கேட்டு மும்பையில் ஒருநாள் பிச்சைக்காரராக வாழ்ந்த சம்பவம் நடந்துள்ளது.

நம்மில் பலரும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தை பார்த்து இருப்போம். அந்த படத்தில் விஜய் ஆண்டனிபெரும் கோடீஸ்வரராக இருப்பார். அவரது தாய் கோமா நிலைக்கு சென்றிருப்பார். டாக்டர்களால் அவரை காப்பாற்ற முடியாது என்று காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மனவருத்தத்தில் விஜய் ஆண்டனி இருப்பார். இந்த சமயத்தில் ஆன்மி துறவி ஒருவர் தாயை காப்பாற்ற வேண்டும் என்றால் 48 நாள் பிச்சையெடுக்க வேண்டும் என்று சொல்வார். அதை கேட்டு விஜய் ஆண்டனி பிச்சைக்காரராக மாறி பிச்சையெடுத்து இருப்பார். இது சினிமா. ஆனால் தற்போது ஆன்மிக குரு சொன்னதால் பெரும் கோடீஸ்வரராக இருக்கும் பாஜக எம்எல்ஏ ஒருவர் மும்பையில் பிச்சையெடுத்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். மும்பை புறநகரில் காட்கோபர் கிழக்கு சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பராக் ஷா. இவர் அடிப்படையிலேயே பெரிய தொழிலதிபர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்த இவருக்கு கடந்த 2024 சட்டசபை தேர்தலில் பாஜகவில் காாட்கோபர் கிழக்கு சட்டசபை தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார். இவரது சொத்து மதிப்பு ரூ.3,383 கோடியாகும். கடந்த 2024ம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அவர் தனது வேட்புமனுவில் இணைத்து இருந்த பிரமாண பத்திரத்தில் அதனை உறுதி செய்திருந்தார். அதுமட்டுமின்றி பராக் ஷா ‘மேன் இன்ஃப்ரா’ என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இப்படி பெரும் கோடீஸ்வவராக இருக்கும் பாஜக எம்எல்ஏ பராக் ஷா ஏன் பிச்சைக்காரராக மாறினார்? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அதற்கு அவரது ஆன்மீக குரு தான் முக்கிய காரணம்.பராக் ஷா ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர். சமீபத்தில் அவர் ஜெயின் குரு ஒருவரை சந்தித்தார். அப்போது தற்போது நடக்கும் ஜெயின் பாரம்பரிய புனித மாதத்தில் ஒருநாள் பிச்சைக்காரராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்லது நடக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பராக் ஷா ஒருநாள் பிச்சைக்காரராக வாழ்ந்தார். மும்பையில் அவர் அழுக்கு உடை அணிந்து பிச்சைக்காரராக ஒருநாள் வாழ்ந்தார். தெருவோரம் அமர்ந்து பிச்சைக்காரர் போல் பொதுமக்களிடம் பிச்சையெடுத்தார். அந்த நாளின் கடைசியில் அவர் பிச்சைக்காரர் போல் அணிந்த வேடத்தை கலைத்து சொகுசு காரில் புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி பராக் ஷா கூறுகையில், ”என்னை சந்திக்க தினமும் பொதுமக்கள் ஏராளமாக வந்து வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் இப்போது அந்த மக்களை தேடி நான் சென்றேன். உண்மையில் பொதுமக்கள் என்னை விட பெரியவர்கள். நான் பிச்சை எடுத்தபோது ஒருவர் எனக்கு ரூ.20 கொடுத்துவிட்டு சாப்பிட செல்லும்படி கூறினார். அங்கு சமோசா விற்பவர் நின்றார்.நான்அவரிடம் சமோசா வாங்கிவிட்டு பணம் இல்லை என்று கூறினேன். அவர் என்னிடம் சிரித்தபடி சமோசா தந்தார். உண்மையில் அந்த வியாபாரி ஏழை. ஆனால் அவர் கோபப்படாமல் பண்பாக நடந்து சமோசா தந்தார். உண்மையில் மும்பையில் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய தயாராக உள்ளனர் என்றார். இருப்பினும் பிச்சைக்காரராக ஒருநாள் மாறியதன் பின்னணியில் உள்ள சரியான காரணம் பற்றி பராக் ஷா எதுவும் கூறவில்லை.