ரீல்ஸுக்காக மட்டுமே பேசுகிறார் விஜய் – உதயநிதி பேட்டி

நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வரின் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க பேரவைத் தலைவர் மறுத்ததையடுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டு பின்னர் அவை வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
“நாங்கள் முதல்வரிடம் கேட்ட கேள்விகளுக்கு தயார் செய்துவிட்டு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பேரவையில் திமுக மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் வைத்துள்ளார். அதற்கு விளக்கம் அளிக்க அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். முதலில் பேச வாய்ப்பு தருவதாக பேரவைத் தலைவர் கூறி பின்னர் மறுத்துவிட்டார். முதல்வரின் அழுத்தமா? அதிகாரிகளின் அழுத்தமா?
அதே ஆக்டிங், பன்ச் டயலாக், ரீல்ஸுக்காக மட்டுமே முதல்வர் பேசிவிட்டுச் சென்றுள்ளார். ஒப்புவித்தல் போட்டிபோல பேரவையில் தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளார். திமுக ஆட்சி நடக்கிறது என்ற முனைப்பில் முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நேற்று நடந்த கொலை பற்றி பேசாமல் 1970க்கு சென்று மிசா, சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகிறார். சர்க்காரியா கமிஷன் விவாகரத்துக்குப் பிறகு திமுக 3 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது.
கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச் மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதல்வர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1 சதவீதம் கூட தகுதி இல்லை. முதல்வர் விஜய் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து” என்று பேசினார்.