திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் மற்றும் 6 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் 600 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஸ்ரீரங்கம் கோவில் சமய பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் எனபவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் மற்றும் பிற கோவில்களுக்கு தொண்டுகள் செய்வதற்காக அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு சமய பணிகளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
சுவாமியின் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் மற்றும் 6 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்துகள் இருக்கிறது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை மேற்கண்ட அறக்கட்டளை வழியாக திருப்பணிகளுக்கு செலவிட்டு வந்தார்கள் அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த சொத்துக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகளே பராமரிப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.
அந்த நிலத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சமய பணிகளுக்கு பயன்படுத்த முடியும். அந்த நிலத்தை விற்பதோ, வாங்குவதோ இயலாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட நிலமானது, தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலமாக கிரையப்பத்திரம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தை வாங்கிய நபர்கள் இப்போது அதனை வகை மாற்றி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை கிரையம் செய்ததற்கான பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த அறக்கட்டளை சொத்தின் மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மேற்கண்ட அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை வகை மாற்றி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்தால் அதனை ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், திருச்சி மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.









