2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக பல ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் எழுந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. மேலும் தவெகவுடன் கூட்டணியிலும் காங்கிரஸ் இணைந்தது. இதனையடுத்து விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்விலும் ராகுல் காந்தி பங்கேற்றது பேசுபொருளானது.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக திமுக தரப்பில் ஒரு சில தலைவர்கள் குற்றம்சாட்டினர். திமுக தலைவர்களும் காங்கிரஸை கடுமையாக விமர்சிக்க, அதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதிலளிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, ஜூன் 19, 2026 இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துப் பதிவில், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், அவருக்கு நல்ல ஆரோக்கியம் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.அவருக்கு பதிலளித்த ராகுல் காந்தி தனது பதிவில், மு.க.ஸ்டாலினுக்கு, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ‘இந்தியா’ எனும் கோட்பாடு, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் காப்பதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாடு தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போராட்டம், வெற்றி பெறும் வரை நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் விஜய்யின் வாழ்த்துக்கு ராகுல் காந்தியின் பதிலில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான பற்றிலும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியுடன் இணைந்து நிற்கிறோம். அத்துடன், தமிழ்நாடு மக்களின் நலன், கண்ணியம் மற்றும் அபிலாஷைகளுக்காகத் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.








