திமுக – அதிமுக இணைவு – தமிழ்நாட்டுக்கு நல்லது – வன்னி அரசு

திமுக – அதிமுக இணைவது தமிழ்நாட்டிற்கு நல்லது” என விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இடதுசாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையின்றி ஆதரவு அளித்தன. இதற்கிடையே, விஜய் ஆட்சியமைப்பதை தடுக்க திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக கருத்துகள் எழுந்தன. மேலும், அதிமுகவுக்கு திமுக ஆதரவளித்து ஆட்சியமைக்க முயற்சி செய்ததாகவும், முதலமைச்சராக விசிக தலைவர் திருமாவளவனை முன்மொழிந்ததாகவும் தகவல்கள் தீவிரமாகப் பரவின. எனினும், இந்த தகவல்களை திமுக திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு அதிரடி தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வன்னி அரசு, “திமுக, அதிமுக இணைந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்தேன். திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு நல்லதுதான். இந்த நேரத்திலாவது முதலமைச்சர் வேட்பாளர் என்ற இடத்துக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். நாங்கள் இதை செய்யவில்லை என்றால் எங்களால் தான் ஆளுநர் ஆட்சி வந்தது என்ற பேச்சு வந்திருக்கும். தவெகவுக்கு வெறும் ஆதரவு மட்டும் தர வேண்டாம். துணை முதலமைச்சர் பதவி கேளுங்கள் எனக் கூறினோம். திமுக அதிமுக இணைப்புக்கு இதற்கு முன்பே பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள். பிஜு பட்நாயக் கூட இதற்கு முயன்றிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் வலிமையாக இருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. அந்த அடிப்படையிலும் திமுக அதிமுக இணைப்பை வரவேற்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.