விஜயின் நேரடி கண்காணிப்பில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னர், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்ற தினத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில் பெண்கள் பாதுகாப்புக்கான “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” உருவாக்கும் திட்டமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் க. மணிவாசன் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முதன்மை இலக்காகக் கொண்டு இந்த படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உடனடி உதவி வழங்குதல், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல், குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது ஆகியவை இந்த படையின் முக்கிய நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. முதல்வர் விஜயின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில்:

1 காவல் கண்காணிப்பாளர் (SP)

2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP)

4 காவல் ஆய்வாளர்கள்

8 காவல் உதவி ஆய்வாளர்கள்

20 காவலர்கள்

என அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு படை, குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கும். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய பணியாகும். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி, பாதுகாப்பு மற்றும் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.