மாநிலங்களவையில் புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று (ஏப்ரல் 16) பதவியேற்றுக் கொண்டனர்.

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். மாநிலங்களவையில் அவருக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்பிக்கள் மேசைகளைத் தட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி கரகோஷங்களுக்கு மத்தியில் நிதின் நவீன் இந்தியில் பதவியேற்றார்.

நிதின் நவீன் உள்பட பதவியேற்ற மற்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சி. பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்தார்.புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அஸ்ஸாம், பிகார், ஹரியாணா, சத்தீஸ்கர், ஹிமாசலப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.பதவியேற்ற உறுப்பினர்களில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தேராஷ் கோவாலா (பாஜக), ஜோகன் மோகன் (பாஜக) மற்றும் பிரமோத் போரோ (யுபிபி-எல்) ஆகியோர் அடங்குவர்.

பிகார் மாநிலத்திலிருந்து நிதின் நவீன், உபேந்திர குஷ்வாஹா, ராம் நாத் தாக்கூர் மற்றும் சிவேஷ் குமார் (பாஜக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தை லட்சுமி வர்மா (பாஜக) மற்றும் பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்) ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஹரியானா மாநிலத்தை கரம்வீர் சிங் பௌத் (காங்கிரஸ்) மற்றும் சஞ்சய் பாட்டியா (பாஜக) ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஹிமாசலப் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனுராக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வினோத் ஸ்ரீதர் தாவ்டே (பாஜக) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜீத் குமார் (பாஜக) ஆகியோரும் பதவியேற்றவர்களில் அடங்குவர்.

தெலங்கானா மாநிலத்தை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி மற்றும் வேம் நரேந்தர் ரெட்டி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.