தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 8, 2026அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தற்போது தலைமைச் செயலாளராக இருந்த என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம். சாய் குமார் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்.
ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (Director General of Police – Armed Police and Vigilance and Anti-Corruption) இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தி, புதன்கிழமை மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது.
நிர்வாகத் திறமையில் அனுபவம் வாய்ந்த எம். சாய் குமார், ஏற்கனவே பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றியவர். தேர்தல் நேரத்தில் நிர்வாக இயந்திரத்தைச் சமநிலையுடன் கொண்டு செல்வதில் இவருக்கு முக்கியப் பங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல், ஐ.பி.எஸ் வட்டாரத்தில் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புதன்கிழமை மாலை 4:01 மணிக்கு வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அன்று மாலையே இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழலில், புதிய தலைமைச் செயலாளரின் வருகை அரசு நிர்வாகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஏற்கனவே தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழக அரசியலில் இப்போது அனல் பறக்கும் விவாதம், ‘பொறுப்பு’ டிஜிபி வெங்கடராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் அந்த நாற்காலியில் அமரவைக்கப்பட்டதுதான். “ஸ்டாலின் நினைத்தது ஒன்று. நடந்தது வேறு” என அறிவாலய வட்டாரமே அதிர்ந்து போயிருக்கிறது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னால் டெல்லியின் ‘பவர்’ விளையாட்டும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ‘மூவ்’களும் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
கடந்த 2025 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றபோதே, புதிய டிஜிபி நியமனம் நடந்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ தனக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த விரும்பினார். அதன் விளைவாகவே ஜி. வெங்கடராமன் ‘பொறுப்பு’ டிஜிபியாக நியமிக்கப்பட்டார். எட்டு மாதங்கள் ஓடிவிட்டன, தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், “இவரே இருக்கட்டும்” என பிடிவாதம் காட்டியது தமிழக அரசு. இந்த தாமதத்திற்கு இன்னொரு காரணம் தமிழக அரசின் லிஸ்டை டெல்லி உள்துறை ஏற்கவில்லை.
யுபிஎஸ்சி விதிமுறைகளின்படி மூன்று பெயர்களைப் பரிந்துரைத்து, அதில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தது தமிழக – மத்திய அரசு. தமிழக அரசின் லிஸ்டை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்தது. “தேர்தல் நேரத்தில் நமக்குச் சாதகமான ஒரு அதிகாரி கையில் சட்டம்-ஒழுங்கு இருப்பதுதான் பாதுகாப்பு” என்பது ஆளுங்கட்சியின் கணக்காக இருந்தது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாரபட்சமாக இருப்பதாகப் புகார் வாசித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லிக்கு பறந்த ரகசியத் தகவல்களில், பொறுப்பு டிஜிபியை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி தேர்தலைச் சந்திக்கத் திட்டமிடுகிறது என்கிற பாயிண்ட் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
அமித் ஷாவிடம் எடப்பாடி தரப்பு கொடுத்த அழுத்தமும், டெல்லி மேலிடம் போட்ட அதிரடி உத்தரவாக வந்து விழுந்தது.விதிமுறைகளை மீறி எவ்வளவு காலம் பொறுப்பு அதிகாரியை வைத்திருப்பீர்கள்?” என ஆணையம் சீறியதன் விளைவுதான் இந்த நள்ளிரவு மாற்றம்.
ஏற்கனவே ஆட்சி மாற்றம் உறுதி.என்று இப்பவே அதிகார வர்க்கத்தின் காதுகளில் பேசிக்கொண்டு இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதாவது பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தன் பக்கம் இழுக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி. அடுத்து “நம்ம ஆட்சிதான் வரப்போகுது. வர்றவங்களுக்கெல்லாம் வெயிட்டான போஸ்டிங் வெயிட்டிங்” – இதுதான் சமீபகாலமாக சில முக்கிய அதிகாரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பறக்கும் தூது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, தற்போது பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் சில ‘பவர்ஃபுல்’ ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசி வருகிறதாம்.அப்படித்தான் தன் ஆட்சியில் தனக்கு செயலாளராக இருந்த சாய் குமாரை தலைமை செயலாளராக வருகிறீர்களா என்று எடப்பாடி கேட்டதாக கூறப்படுகிறது. இப்படிபட்ட நிலையில்தான் தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.







