அதிமுகவின் மிக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து, அன்றைய அதிமுக ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த தனக்கே தற்போது கட்சியில் மரியாதை இல்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். அவிநாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட ஆலோசிக்காமல் அந்தத் தொகுதியை பாஜகவுக்கு எடப்பாடி ஒதுக்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு கட்சியில் உழைத்த மூத்த தலைவருக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாக தனபாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். பாஜக கேட்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் எடப்பாடி வளைந்து கொடுப்பதாகவும், அதனாலேயே ராசிபுரம் மற்றும் அவிநாசி போன்ற தனித் தொகுதிகளை அதிமுக தாரை வார்த்துள்ளதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். ஆட்சியைத் தக்கவைக்க உதவிய ஒருவருக்கு உரிய அங்கீகாரம் வழங்காதது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் உச்சகட்டமாக, தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி மிகப்பெரிய துரோகம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெக சார்பில் ராசிபுரம் தொகுதியில் லோகேஷ் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மூத்த தலைவர் தனபாலின் குடும்பமே அதிமுகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






