விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. பாசிட்டிவாக பேசிய சுந்தர்.சி

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் பெற்ற சுந்தர் சி, இப்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்காக சென்னை விமான நிலையம் வந்த சுந்தர் சி விஜய் பற்றி தன்னால் தப்பாக பேச முடியாது என்று சொன்ன விஷயம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.

சுந்தர் சி பல வெற்றி படங்களை இயக்கியவர், குறிப்பாக “அரண்மனை” மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். அந்த சினிமா பயணத்திலிருந்து நேராக அரசியலுக்கு வந்திருப்பது தற்போது பெரிய பேச்சாக மாறியுள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில், மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். அதிமுக – பாஜக கூட்டணியில், புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் அவர் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய் மற்றும் அவரது கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுந்தர் சி கொடுத்த பதில் தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.

அவர் மிகவும் அமைதியாக, “விஜய் சார் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கு. என் மனைவி அவரை தம்பி என்று தான் கூப்பிடுவாங்க. விஜய்யும் என் மனைவியை அக்கா என்று தான் கூப்பிடுவார். அதனால் நான் எந்த சூழலிலும் விஜய் அல்லது அவருடைய கட்சி பற்றி விமர்சிக்க மாட்டேன்” என்று தெளிவாக கூறினார்.

அதே நேரத்தில், மதுரை மத்திய தொகுதியில் போட்டி என்பது “உதயசூரியன் சின்னத்துக்கும் இரட்டை இலைக்கும் தான்” என்று கூறி தனது அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.

மேலும் நேற்று வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா சார்பில் தவெக பிரச்சாரம் நடைபெற்ற போது அதில் கண்ணாடி பாட்டில் வீசப்பட்டது. அது குறித்து சுந்தர் சி பேசுகையில், இதுவெல்லாம் ரொம்ப தப்பு வன்முறையை யார் செய்தாலும் தவறுதான். யாருக்கு நடந்தாலும் அது வருத்தம் தான். இதுபோல வன்முறைகள் எல்லாம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் என்னை போன்ற சாமானியர்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று பேசி இருக்கிறார்,

இப்போது அரசியலில் பொதுவாக என்ன நடக்கிறது என்றால், ஒரே கட்சியில் இருந்தவர்கள் வேறு கட்சிக்கு போனதும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது வழக்கமாகி விட்டது. நேற்று வரை பாராட்டியவர்களே இன்று எதிராக பேசுவது பல இடங்களில் பார்க்க முடிகிறது.

ஆனால் அந்த நிலைமையில், சுந்தர் சி எடுத்த இந்த நிலைப்பாடு கொஞ்சம் வேறுபட்டதாக தெரிகிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்தான்” என்ற மனநிலையில் அவர் பேசிய விதம், சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்படுகிறது.

விஜய் அரசியலுக்கு முழுமையாக வந்த பிறகு, அவரை சுற்றி பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. குடும்ப வாழ்க்கை குறித்த விவாதங்கள்,மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்த செய்திகள், நடிகை திரிஷாவுடன் தொடர்பு இருப்பதாக பரவும் வதந்திகள், வேட்புமனுவில் சொத்து விவரங்கள் வெளியானபோது எழுந்த விமர்சனங்கள் என இவை எல்லாம் சேர்ந்து விஜய்யை அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்படும் நபராக மாற்றி இருக்கிறது.

ஒரு பக்கம் விஜய் தனது சினிமா வாழ்க்கையை முடித்து வைத்து முழுநேர அரசியலுக்கு வந்திருக்கிறார். மற்றொரு பக்கம் சுந்தர் சி சினிமாவையும் தொடர்ந்தபடியே அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இருவரும் வேறு பாதையில் சென்றாலும், ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலையை காப்பாற்றி கொண்டிருப்பது தான் இப்போது பலரையும் கவர்ந்திருக்கிறது.

மொத்தத்தில் அரசியல் என்றாலே கடுமையான விமர்சனங்களும் தாக்குதல்களும் வழக்கமான விஷயம். ஆனால் அந்த சூழலிலும் தனிப்பட்ட மரியாதையை காப்பாற்றிக் கொண்டு பேசும் சுந்தர் சி எடுத்த இந்த நிலை, அரசியலில் இன்னும் சில நல்ல விஷயங்கள் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.

இதே நேரத்தில், விஜய்யின் அரசியல் பயணமும் பல சவால்களுடன் தொடர்கிறது. இந்த இருவரின் பயணம் எப்படி முன்னேறும் என்பதைக் கவனிக்க ரசிகர்களும், அரசியல் வட்டாரமும் காத்திருக்கிறது.