பாஜக வேட்பாளருக்கு ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பாஜகவின் 3 வேட்பாளர்களும், முன்னாள் முதல்வர் பிஜு ஜனதாதளம் கட்சியின் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

ஒடிசா மாநில எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் பார்த்தால் பாஜகவுக்கு 2 ராஜ்யசபா வேட்பாளர்களும், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா வேட்பாளரும் எளிதாக வெல்வார்கள். இருப்பினும் 4வது வேட்பாளரின் வெற்றிக்கு எந்த கட்சியிடமும் போதிய அளவு எம்எல்ஏக்கள் கிடையாது. இதனால் 4வது வேட்பாளராக யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து பாஜக சார்பில் திலிப் ராய் என்பவரும், பிஜு ஜனதாதளம் சார்பில் தத்தாஸ்வர் ராய் ஹோட்டா என்பவரும் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் சார்பில் களமிறக்கப்பட்ட தத்தாஸ்வர் ராய் ஹோட்டாவுக்கு வாக்களிக்க காங்கிரஸ், இடதுசாரி எம்எல்ஏக்கள் முடிவு செய்தனர். பாஜக வேட்பாளர் திலிப் ராயை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும், பிஜு ஜனதாதளம் கட்சியுடன் கைகோர்த்தது.

தத்தாஸ்வர் ராய் ஹோட்டாவுக்கு தான் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஓட்டளிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் பிஜு ஜனதாதளம் சார்பிலும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ உள்பட 3 பேரும் அவருக்கு ஓட்டளிக்கவில்லை. இவர்கள் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட திலிப் ராய்க்கு ஓட்டளித்தனர். அவர் வெற்றியும் பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தத்தாஸ்ர் ராய் ஹோட்டா தோல்வியை சந்தித்தார். முதற்கட்ட விசாரணையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சேனா, தசராதி கேமாங்கோ, சோபியா ஃபிட்ரோட்ஸ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவை மீறி பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்தனர். இதையடுத்து 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்தா சரண் தாஸ் கூறுகையில், ” காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சேனா, தசராதி கேமாங்கோ, சோபியா ஃபிட்ரோட்ஸ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவை மீறி பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்தனர். இவர்கள் 3 பேரும் காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தி உள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்படி செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.