ஆந்திர மாநிலத்தின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவராக திகழ்பவர் ரகுராம கிருஷ்ண ராஜூ. இவர் தற்போது ஆந்திர சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் ஆக இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நரசபுரம் தொகுதியின் எம்.பி ஆக இவர் இருந்தபோது, அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார், ரகுராம கிருஷ்ண ராஜுவை கைது செய்தனர். போலீசார் தன்னை கைது செய்த போது சித்ரவதை செய்ததாக ரகுராம கிருஷ்ணராஜூ, கடந்த 2024 ஆம் ஆண்டு குண்டூர் மாவட்ட போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து அப்போது ஆந்திர மாநிலத்தில் டிஐஜியாக பணியாற்றிய சுனில் குமார் நாயக் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சுனில் குமார் நாயக், தற்போது பீகார் மாநிலத்தில் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை ஐஜியாக பதவி வகித்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியான சுனில் குமார் நாயக்கை கைது செய்வதற்காக ஆந்திர மாநில போலீஸ் குழு ஒன்று பீகார் தலைநகர் பாட்னாவிற்கு புறப்பட்டு சென்றது. அங்கு சென்ற ஆந்திர போலீசார், சுனில் குமார் நாயக்கின் வீட்டிற்கு நேற்று அதிகாலை 6 மணிக்கு சென்று, அவரை சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர்.
சுனில் குமார் நாயக்கை ஆந்திர போலீசார் சுற்றி வளைத்த போது அவருடன் பணியில் இருந்த சக ஊர்க்காவல் படை வீரர்கள் பெருமளவில் அங்கே குவிந்தனர். அவர்கள் சுனில் குமார் நாயக்கை கைது செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு மாநில போலீசாருக்கு இடையே ஆன வாக்குவாதத்தால் அங்கு பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.இதனை அடுத்து ஆந்திர போலீசார் பீகார் நகர போலீஸ் சூப்பிரண்டு பானு பிரதாப் சிங்குக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு போலீஸ் படையுடன் விரைந்து வந்த அவர், பாட்னா ஊர்க் காவல் படை வீரர்களை சமாதானப்படுத்தினார். இதன் பின்னர், சுனில் குமார் நாயக்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உதவுமாறு ஆந்திர போலீசார் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இரு மாநில போலீசாரும் சேர்ந்து அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
ஐபிஎஸ் அதிகாரி சுனில் குமார் நாயக் மீதான வழக்கு விவரங்களை நீதிபதியிடம் விவரித்த ஆந்திர போலீசார், அவரை ஆந்திர பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்னா போலீசார், சுனில் குமார் நாயக்கை கைது செய்வது பற்றிய தகவலை ஆந்திர போலீசார் முன்கூட்டியே தரவில்லை எனவும் அதற்கான உரிய நடைமுறைகளை ஆந்திர போலீசார் பின்பற்றவில்லை எனவும் தெரிவித்தனர்.
பீகார் போலீசாரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த கைது விவகாரத்தில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக் கூறி சுனில் குமார் நாயக்கை ஆந்திரா கொண்டு செல்ல அனுமதி அளிக்க மறுத்தனர். வழக்கு டைரி மற்றும் கைது வாரண்டை ஆந்திர போலீசார் எடுத்துச் செல்லாததையும் நீதிபதி கண்டித்தார்.இதனைத் தொடர்ந்து ஆந்திர போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்டதாக கருதப்பட மாட்டார் எனவும் பாட்னா போலீசார் தெரிவித்தனர். மேலும் ஐபிஎஸ் அதிகாரியை தவறாக கைது செய்த ஆந்திர மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அலோசித்து வருவதாக பாட்னா போலீசார் கூறினர். இந்த சம்பவம் பாட்னாவில் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.








